மத பிரசாரங்கள் மூலம் பிற மதத்தினர் குறித்து வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த ஜாகிர் நாயக் ஓமானில் வைத்து கைது செய்யப்படுவார் என பலதரப்பினராலும் கூறப்பட்டுள்ள நிலையில், ரமலான் மாதத்தினை முன்னிட்டு ஓமான் சென்றுள்ள ஜாகிர் நாயக் இன்று அங்கு நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றினார்.
அதில் பேசிய ஜாகிர் நாயக்,” இந்தியாவில் பெரும்பாம்பாலான இந்து மதத்தினர் என்னை விரும்புகின்றனர். அவர்கள் என்னை அதிகம் விரும்புவதால் வாக்கு அரசியலுக்கு அது பிரச்சினையை உருவாக்குகிறது. இந்தியாவில் நான் கூட்டங்கள், உரை நிகழ்த்தும்போது பீகார், கிஷன்கஞ்ச் பகுதியில் இருந்து 5 கோடியில் இருந்து 10 கோடி பேர் வருவார்கள். அதில் 20 சதவிகிதம் பேர் இஸ்லாமிய மதத்தை சாராதவர்கள். அவர்கள் என்னிடம் பேசும்போது எங்கள் மதத்தில் 40 மணி நேர உரைக்கு பின்னரும் எதையும் கற்றுக்கொள்ளாதபோதும் நீங்கள் பேசிய 2 மணி நேர உரையில் நிறைய கற்றுக்கொண்டோம் என்று கூறினர்’ என்றார்.
இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட ஜாகிர் நாயக் பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டல், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுதல், பணமோசடி உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக இந்தியாவில் சுமத்தப்பட்டதால், அவர் இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு தப்பிவந்தார்.
தற்போது மலேசியாவில் குடியுரிமை பெற்றுள்ள ஜாகிர் நாயக், வெறுப்புணர்வு தூண்டும் வகையில் பேசியதால் அவரது பிரசார உரை நிகழ்த்த மலேசியாவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.