பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரும் திங்கட்கிழமை (மார்ச் 27) அதிகாரப்பூர்வ பயணமாக கம்போடியாவிற்கு செல்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி பிரதமராக பதவியேற்ற பிறகு அன்வாரின் ஏழாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
நாளை 9.15 மணியளவில் கம்போடியாவின் புனோம் பென் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்தடைவார் என்றும், அங்கு இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் சிறப்புப் பணிகளுக்கான மூத்த அமைச்சர், டத்தோ டாக்டர் ஓத்மான் ஹாசன் அவர்களால் வரவேற்கப்படுவர் என்றும், இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாம்ப்ரி அப்துல் காதிர் கூறினார்.
கம்போடியப் பிரதமர் ஹுன் சென்னின் அழைப்பின் பேரில் பிரதமரும் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.
இந்த பயணம் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள உறவு மேலும் வலுப்படுத்தும் என்றும், உள்நாட்டுத் துறையில் கம்போடிய தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல், பணியமர்த்துதல், வேலைவாய்ப்பு தொடர்பாக மலேசியா மற்றும் கம்போடிய அரசாங்கங்களுக்கிடையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்திடப்படுவதைப் பிரதமர் பார்வையிடுவார் என்றும் அவர் கூறினார்.








