பத்து பகாட், பாரிட் சுலோங்கிலுள்ள இரண்டு இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டதாக நம்பப்படும் இருவர், சம்பவம் நடந்து ஆறு மணி நேரத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்டனர்.
நேற்று அதிகாலை 3 மணியளவில், பெக்கான் பாரிட் சுலோங் பகுதியில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து, 26 மற்றும் 29 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக, பத்து பகாட் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் இஸ்மாயில் டோல்லா தெரிவித்தார்.
சந்தேக நபர்களிடமிருந்து 3,025 ரிங்கிட் ரொக்கம், ஒரு அரிவாள், ஒரு கத்தி மற்றும் கொள்ளையடித்ததாக நம்பப்படும் பல கைத்தொலைபேசிகள் என்பவற்றை போலீசார் கைப்பற்றினர்.
“நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில், ஸ்னூக்கர் கடை உரிமையாளரிடமிருந்து “தனது கடையை அடையாளம் தெரியாத இருவர் கொள்ளையடித்ததாக” போலீசாருக்கு ஒரு புகார் கிடைத்தது. “அதே நாளில் இரவு 9.30 மணியளவில், தொலைபேசி உபகரணங்களை விற்கும் கடையில் கொள்ளையடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சந்தேக நபர்களுக்கு மேற்கொண்ட சிறுநீர் பரிசோதனையில், இருவரும் போதைப்பொருளுக்கு சாதகமாக இருப்பதும், அவர்களில் ஒருவருக்கு முந்தைய குற்றவியல் பதிவு இருப்பதும் கண்டறியப்பட்டது.
இரண்டு சந்தேக நபர்களும் நேற்று முதல் ஐந்து நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.