நேற்றிரவு ஜோகூரின் தாமான் டாமான்சாரா அலிஃப் பகுதியில் உள்ள ஜாலான் அலிஃப் ஹார்மோனியில் உள்ள ஒரு குடியிருப்புக்கு முன்னால், நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவுகள் தானாக பூட்டிக்கொண்டதால், காரில் சிக்கிய இரண்டு குழந்தைகள் கிட்டத்தட்ட அரை மணி நேர போராட்டத்தின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
நேற்றிரவு 10.38 மணிக்கு தங்களுக்கு சம்பவம் தொடர்பில் அவசர அழைப்பு வந்ததாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
உடனே லார்கின் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் அவசர சேவை உதவிப் பிரிவு (EMRS) மற்றும் மூன்று விரைவு மோட்டார் சைக்கிள் பிரிவினர் (RIM) ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
மூத்த தீயணைப்பு அதிகாரி II அப்துல் ரசாக் முகமட் சாத் தலைமையில் நடந்த இந்த மீட்பு நடவடிக்கையில், காருக்குள் மாட்டிக்கொண்ட “ஒரு வயது மற்றும் இரண்டு வயதுள்ள இரு குழந்தைகளையும் தீயணைப்பு வீரர்கள் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி காரின் கதவைத் திறந்து, பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.
“பாதிக்கப்பட்ட இருவரும் நலமுடன் இருக்கிறார்கள் என்றும் மீட்பு நடவடிக்கை நேற்று இரவு 11.02 மணிக்கு முடிவடைந்தது,” என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு ஊடக அறிக்கை மூலம் தெரிவித்தார்.










