பிரதமரின் சவூதி பயணம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அவசர பிரேரணை தாக்கல்…!

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சமீபத்திய சவூதி அரேபியா பயணம் குறித்து விவாதிக்க, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவசர பிரேரணையை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக வெளியுறவு அமைச்சரிடம் கேட்ட கேள்விகள் நிராகரிக்கப்பட்டதாகக் கூறி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வான் அஹ்மட் ஃபைசல் வான் அஹ்மட் கமால் (PN -மாச்சாங்) குறித்த பிரேரணையை சமர்ப்பித்தார்.

கடந்த புதன் முதல் வெள்ளி வரை (மார்ச் 22 முதல் 24 வரை) சவூதி அரேபியாவிற்கு சென்ற பிரதமரின் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு மற்றும் இருதரப்பு உறவுகளின் நிலை குறித்து விவாதிக்க இந்த பிரேரணை முயல்கிறது என்று, இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 28) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“சவூதி அரேபியாவில் என்ன நடந்தது, இதற்கு யார் பொறுப்பு, பயணத்திற்கு அரசு நிதி எவ்வளவு பயன்படுத்தப்பட்டது என்பதை அறிய பொதுமக்களுக்கு உரிமை உள்ளது.

“நிலைய ஆணைகள் 18(1) மற்றும் 18(2)ன் கீழ், நாடாளுமன்றத்தில் நிலைமையை விளக்குமாறு வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிரை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று பெர்சாத்து அர்மடா (இளைஞர் பிரிவு) தலைவருமான அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில் மேலும் கூறினார்.

அன்வாரின் மூன்று நாள் சவூதி அரேபிய பயணம் தோல்வியடைந்ததாக கடந்த வார இறுதியில் எதிர்க்கட்சியான பெரிகாத்தான் நேஷனல் கூட்டணி கூறியது, ஏனெனில் அன்வாரை ஜெத்தா கவர்னர் மட்டுமே வரவேற்றார் மற்றும் சவூதி அரேபிய பிரதமர் அன்வாரை சந்திக்கவில்லை என்று தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here