பணி ஓய்வு பெற்றவர்கள் தங்களின் பணிக்கொடைகளை (ஓய்வூதியம்) எப்போது பெறுகிறார்கள் என்பதை மோசடி செய்பவர்கள் தெரிந்து கொள்ள முடியும், எனவே அந்நியர்களின் இனிமையான வாக்குறுதிகளில் கவனமாக இருக்க வேண்டும், பணம் சம்மந்தமான கொடுக்கல் வாங்கல்களை செய்யுமுன் உண்மைத்தன்மையை சரிபார்க்குமாறு துணை நிதி அமைச்சர், டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் கூறினார்.
கடந்த ஆண்டில் 22,000 பேர் மோசடி செய்பவர்களால் RM850 மில்லியனை இழந்துள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலான ஓய்வூதியம் பெறுபவர்கள் அடங்குவதாகவும் அவர் கூறினார்.
“ஓய்வூதியம் பெறுபவர்களை குறிவைக்கும் மோசடி செய்பவர்களுக்கு எதிராக அதிக விழிப்புணர்வு இருப்பதை உறுதிசெய்ய ஓய்வூதிய நிதியம் (KWAP) தனது முயற்சிகளை அதிகரிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
தற்போது, ஓய்வூதிய நிதியம் தனது நிதியில் RM160பில்லியன் உள்ளதாகவும், இதில் 770,000-க்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் ஆண்டுதோறும் RM26.7பில்லியனை செலவிடுவதாகவும் அவர் கூறினார்.