“கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங்கிலுள்ள ஒரு முடிதிருத்தும் கடையில் முடிவெட்டிய இரண்டு சுற்றுலாப் பயணிகளிடம் 120 ரிங்கிட் வரை வசூலிக்கப்பட்டது” என்ற குற்றச்சாட்டை தமது துறை விசாரித்து வருவதாக, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் கோலாலம்பூர் கிளை இயக்குனர், அரிஃபின் சம்சுடின் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், மேலதிக அறிக்கைகள் வெளியிடப்படும் என அவர் மேலும் கூறினார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதிகள் என நம்பப்படும் இருவர் டிக்டோக்கில் பதிவேற்றிய இரண்டு நிமிடங்கள் 15 வினாடிகள் கொண்ட வீடியோவில், “சாதாரணமாக முடிவெட்டுவதற்கு தம்மிடம் 120 ரிங்கிட் கட்டணம் அறவிட்டது நியாயமா?” என்று கேட்டுள்ளனர்.
சில உள்ளூர்வாசிகளிடம் தாம் வினவியபோது, சாதாரணமாக முடி வெட்டுவதற்கான விலை RM50 க்கு மேல் இருக்காது என்று அவர் தம்பதியினரிடம் தெரிவித்ததாகவும்” அவர்கள் அந்த வீடியோவில் கூறியுள்ளனர்.