நோன்புப் பெருநாள் கொண்டாட்ட காலத்தின் போது, ஜோகூரில் சுமார் 8,000 போலீசார் பணியில் இருப்பர் என்று ஜோகூர் காவல்துறைத் தலைவர், ஆணையர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் கூறினார்.
இந்த பண்டிகைக் காலத்தில் சுமார் 20 இலட்சம் வாகனங்கள் மாநிலத்திற்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுவதைத் தொடர்ந்து, ஜோகூரின் மொத்த காவல்துறை உறுப்பினர்களில் 90 விழுக்காட்டினர் பணியில் இருப்பார்கள் என்று அவர் கூறினார்.
ஜோகூர் காவல்துறையில் 10 விழுக்காட்டினர் மட்டுமே விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாக, நேற்று
புதன்கிழமை (ஏப்ரல் 19) மாலை ஜோகூர் போலீஸ் தலைமையகத்தில் சுமார் 300 போலீஸ்காரர்களுடன் நடந்த குர்ஆன் ஓதுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார்.
மேலும் மாநிலம் முழுவதும் உள்ள 24 அடையாளம் காணப்பட்ட இடங்களில் சாலைத் தடைகள் அமைக்கப்படும் என்றும்,“சாலை மறியல் பணியில் இருப்பவர்கள் தேவையற்ற சோதனைகளை நடத்தி போக்குவரத்தை நிறுத்த வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது என்றும் கமாருல் ஜமான் கூறினார்.
“சாலையைப் பயன்படுத்துபவர்கள் சாலையில் பொறுமையாக இருக்கவும், சீரான போக்குவரத்தை உறுதிச்செய்யவும், அவர்கள் இலக்கை நோக்கிப் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தவும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.