கோலாலம்பூர்: சூடானில் உள்ள இரண்டு மலேசியர்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.
சூடானில் உள்ள கார்ட்டூமில் உள்ள மலேசிய தூதரகத்தின் ஆயத்த நடவடிக்கையாக, பின்னர் கார்ட்டூமில் இருந்து வெளியேற்றும் செயல்முறைக்காக மலேசியர்களை பாதுகாப்பான இடத்தில் ஒன்று சேர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் கூறினார்.
நேற்று, ஆழ்ந்த மதிப்பீட்டிற்குப் பிறகு, விஸ்மா புத்ரா சிறப்புக் குழுவின் ஆணையுடன், கார்ட்டூமில் உள்ள எங்கள் தூதரக அதிகாரிகள் இரண்டு மலேசியர்களை அவர்களது இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த நடவடிக்கையில், எங்கள் அதிகாரிகள் இரண்டு கனேடியர்கள், ஒரு அமெரிக்கர் மற்றும் இரண்டு ஐக்கிய இராச்சிய குடிமக்களை அந்தப் பகுதியிலிருந்து நகர்த்த உதவினார்கள் என்று அவர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது என்றாலும், உதவி தேவைப்படும் மலேசியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இது மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜம்ரி கூறினார்.
சூடானின் நிலைமை, குறிப்பாக கார்ட்டூமில் உள்ள பெரும்பாலான இடங்களில், சூடான் ஆயுதப் படைகளுக்கும் (SAF) மற்றும் விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையிலான சண்டையால் மோசமடைந்து வருகிறது. மேலும் கருத்து தெரிவித்த ஜம்ரி, சூடானில் நிலைமை மிகவும் சிக்கலானதாகவும் அடிக்கடி மாறி வருவதாகவும், போரிடும் இரு தரப்பினரும் இன்னும் சண்டையிட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபை (UN), ஆப்பிரிக்க ஒன்றியம் (AU), இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) மற்றும் அமெரிக்காவால் பல முறை முன்மொழியப்பட்ட போர்நிறுத்தம் போரிடும் தரப்பினரால் ஏற்று கொள்ளப்படவில்லை என்று அவர் கூறினார்.
சூடானில் உள்ள எங்கள் மக்களின் பாதுகாப்பைக் கவனித்துப் பாதுகாக்கவும், அவர்களை மீண்டும் தங்கள் தாயகத்திற்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை எளிதாக்கப்படவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம் என்று அவர் கூறினார்.