குளுவாங்கில் 4 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் ஒருவர் பலி, மூவர் காயம்

குளுவாங்கிலுள்ள ஜாலான் ஜோகூர் பாரு-ஆயிர் ஈத்தாம் சாலையின் 80 ஆவது கிலோமீட்டரில் நேற்று நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார், மேலும் மூவர் காயமடைந்தனர்.

நேற்று காலை 9.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில், சோ மோய் சோய், 67, என்பவர் தலையில் பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே இறந்தார் என்று, குளுவாங் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் பஹ்ரின் முகமட் நோ கூறினார்.

“ஆரம்ப விசாரணையின் விளைவாக, பாதிக்கப்பட்டவர் புரோத்தோன் ஈஸ்வரா காரில் ஆயிர் ஈத்தாமில் இருந்து சிம்பாங் ரெங்காம் நோக்கி சென்றுகொண்டிருந்தார், அவ்வேளையில் விபத்தில் சம்மந்தப்பட்ட மூன்று வாகனங்களான ஹினோ லோரி, ஒரு மஸ்டா கார் மற்றும் புரோத்தோன் பெர்சோனா கார் ஆகியவை எதிர் திசையில் வந்துகொண்டிருந்தன.

“பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற புரோத்தோன் ஈஸ்வரா கார் திடீரென எதிர் பாதையில் நுழைந்து லோரியில் மோதியதாக நம்பப்படுகிறது, இதனால் லோரி மற்றைய இரு கார்களையும் மோதியதாக நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

இவ்விபத்தில் மஸ்டா கார் ஓட்டுநரின் இடது கை உடைந்தது, லோரி மற்றும் மற்றய கார் ஓட்டுநர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது என்றும் ,”காயமடைந்த அனைவரும் குளுவாங்கில் உள்ள என்சே பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் என்றும் பஹ்ரின் முகமட் கூறினார்.

மேலும் “இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் படி விசாரிக்கப்படுகிறது,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here