பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி, ஒற்றுமை அரசாங்கத்தின் மீது பொறாமை கொள்ளவில்லை, மாறாக அரசாங்கத்திற்கு ஈடான ஒரு சிறந்த எதிர்கட்சியாக மட்டுமே தனது பணியைச் செய்கிறது என்று, வான் அகமட் ஃபைசல் வான் அகமட் கமால் தெரிவித்தார்.
பெரிக்காத்தான் நாடாளுமன்றத்திலோ அல்லது வெளியிலோ மக்களின் பணி மற்றும் நம்பிக்கையை காப்பாற்றும் பணிகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறது என்று பெர்சாத்து இளைஞர் அணி தலைவரான அவர் கூறினார்.
சமீபத்தில் அம்னோ பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் அசிரஃப் வாஜ்டி டுசுகி கூறியது போல் ஒற்றுமை அரசாங்கத்தை பார்த்து பொறாமை இல்லை என்றார்.
“டான்ஸ்ரீ முகைதின் யாசின் மற்றும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோபின் தலைமையிலான அரசாங்கங்களை அவர் விமர்சித்த போது, தற்போதைய அரசாங்கம் மக்களின் கவலைகளைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது என்பதை அசிரஃப் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.
ஒற்றுமை அரசு கவிழும் என பொய்களை பரப்புபவர்கள், பொறுப்பில் இருக்க முடியாததால் பொறாமை கொண்டுள்ளனர் என்று அசிரஃப் வாஜ்டி கடந்த வெள்ளிக்கிழமை (மே 5) கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.