அந்நியத் தொழிலாளர் மறுசீரமைப்புத் திட்டம் (RTK) 2.0 இந்த கீழ் அதிகளவான விண்ணப்பங்களை சிலாங்கூர் பதிவு செய்துள்ளது.
அதே நேரம் இந்த ஆண்டு ஜனவரி முதல் மே 10 வரை லெவிகள் மற்றும் அபராதங்கள் மூலம் RM100 மில்லியனுக்கும் அதிகமாக வருமானம் ஈட்டியுள்ளதாக, சிலாங்கூர் குடிநுழைவுத் துறை இயக்குநர், டாக்டர் முஹமட் சியாஹ்மி ஜாஃபர் கூறினார்.
மொத்தம் 182,754 சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களை உள்ளடக்கிய விண்ணப்பங்கள் மற்றும் பதிவுகள் மூலம் இந்த தொகை வசூலிக்கப்பட்டது என்றார்.
இதில் சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் பதிவானதற்கு, சிலாங்கூர் தொழில்துறை பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் இயங்குவது முக்கிய காரணிகளில் ஒன்று, என்று அவர் கூறினார்.
பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் (20,794) சரிபார்ப்பு செயல்முறையின் மூலம் 19,699 அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று, இன்று வெள்ளிக்கிழமை (மே 12) இங்குள்ள குடிநுழைவுத் துறையில் வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களுக்கான RTK 2.0 ஐ நடைமுறைப்படுத்துவதைக் கவனித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
இதுதவிர, சிலாங்கூரில் 7,250 வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர், இதில் அதிகபட்சமாக இந்தோனேசியர்கள் (4,686), அதனைத்தொடர்ந்து பிலிப்பைன்ஸ் (2,091) மற்றும் வியட்நாம் (201) ஆகியோர் உள்ளனர்.
வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை, தாய்லாந்து, கம்போடியா, நேபாளம் மற்றும் லாவோஸ் ஆகியவை அடங்கும் என்று அவர் மேலும் கூறினார்.