தடை செய்யப்பட்ட பகுதிகளில் புகைபிடித்ததற்காக இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 37 இலட்சம் மதிப்புள்ள மொத்தம் 14,872 சம்மன்கள் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே காலகட்டத்தில் 5,028 கண்காணிப்பு நடவடிக்கைகள் அமைச்சகத்தால் நடத்தப்பட்டன என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.
ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கு வழங்கப்பட்ட சம்மன்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் மொத்த எண்ணிக்கையில் பாதியாக இருந்தது, அதாவது கடந்த ஆண்டு புகைபிடித்ததற்காக வழங்கப்பட்ட மொத்த சம்மன்களின் எண்ணிக்கை 30,648 ஆகும் என்றார்.
“தேசிய போலீஸ் படை போன்ற அமலாக்க முகவர்களுடன் இணைந்தது இந்த நடவடிக்கைகள் நடத்தப்பட்டன.
மேலும் கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், சிலாங்கூர் மற்றும் பிற மாநிலங்களிலும் இச் செயல்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன, ”என்று அவர் இன்று புதன்கிழமை (மே 24) சையத் சாதிக் அப்துல் ரஹ்மானுக்கு (முடா-மூவார்) நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
உணவகங்களில் புகைபிடிப்பதைத் தடுக்க அமைச்சகத்தின் அமலாக்க நடவடிக்கைகளைக் கூறுமாறு சையத் சாதிக் சுகாதார அமைச்சரிடம் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.