கோலாலம்பூர்:
தேசிய ரயில்வே கட்டமைப்பில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் கேபிள் திருட்டுகளை ஒடுக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நாடு முழுவதும் 1,146 செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
இவ்வாண்டின் நான்காம் காலாண்டிற்குள் (Q4 2026) இந்த அதிநவீன கேமராக்கள் முழுமையாகப் பொருத்தப்பட்டுவிடும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
துணைக் போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபொல்லா (Datuk Hasbi Habibollah) நாடாளுமன்ற மக்கள் அவையில் பேசுகையில், ஏற்கனவே 247 AI கேமராக்கள் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டார்.
எஞ்சிய கேமராக்கள் ரயில் நிலையங்கள், மின் விநியோக நிலையங்கள் (Feeder Stations) மற்றும் பிரதான இரயில்வே வழித்தடப் பகுதிகளில் (MPTSL) பொருத்தப்பட்டு வருகின்றன என்றார்.
RM14 மில்லியன் மதிப்பிலான திட்டம்அபாயகரமான மற்றும் கம்பித் திருட்டுகள் அதிகம் நடக்கக்கூடிய ஹாட்ஸ்பாட் (High-risk areas) இடங்களைக் கண்காணித்து, சந்தேகத்திற்குரிய நடமாட்டங்களை உடனடியாகக் கண்டறிய இந்த RM14 மில்லியன் மதிப்பிலான திட்டம் உதவும் என்று அமைச்சர் தெரிவித்தார்.”இந்த 1,146 AI கேமராக்களின் ஒட்டுமொத்தத் திட்ட மதிப்பு RM14 மில்லியனாகும். வரும் அக்டோபர் – டிசம்பர் மாதங்களுக்குள் இந்த பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்த, இந்த AI கேமராக்களுடன் கூடுதலாக ட்ரோன்கள் (Drones) பயன்படுத்தப்படும். மேலும், KTMB துணைக் காவல்துறையினர் விரைவாகச் சென்று நடவடிக்கை எடுப்பதற்காக 20 ஸ்கிராம்ப்ளர் (Scrambler) ரக மோட்டார் சைக்கிள்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.




















