கிள்ளான் பள்ளத்தாக்கு, பேராக் மற்றும் நெகிரி செம்பிலானைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனத் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், ஓய்வு பெற்ற கடற்படை வீரர் ஒருவர் உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளன.
24 முதல் 40 வயதுடைய சந்தேக நபர்கள், கடந்த ஆண்டு இறுதியிலிருந்து இந்தக் கும்பல் செயல்படுவதாகவும், இவை திருடப்பட்ட வாகனங்களை தாய்லாந்தில் குறைந்த விலையில் மறுவிற்பனை செய்துவந்ததாகவும், செந்தூல் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அஹ்மட் சுகர்னோ முகமட் ஜஹாரி தெரிவித்தார்.
இந்தக் கும்பலின் மூளையாக அறியப்பட்ட சசி நேவி என அறியப்படும் நபர், 40, பேராக்கின் கம்போங் காஜாவில் கைது செய்யப்பட்டார், மேலும் அவரது நண்பர்கள் இருவர் மே 13 அன்று ஈப்போ மற்றும் நீலாய், நெகிரி செம்பிலானில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து இரண்டு கார்கள் மற்றும் திருடப்பட்ட பொருட்கள் மற்றும் பல போலி பதிவு எண் பலகைகளையும் போலீசார் கைப்பற்றியதாக, நேற்று செந்தூல் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அஹ்மட் சுகர்னோ கூறினார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் பல்வேறு குற்றங்களுக்காக முந்தைய குற்றப் பதிவுகளை கொண்டவர்கள் என்றும், விசாரணைகளுக்கு உதவுவதற்காக மே 14 முதல் 18 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.
மேலும் மாவட்டத்தில் உள்ள பல வழக்குகள் தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடத்த சந்தேக நபர்கள் அனைவரும் ஈப்போ IPDயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
அதைத் தொடர்ந்து, இதுவரை பதிவாகிய ஏழு திருட்டு வழக்குகளை போலீசார் வெற்றிகரமாக தீர்த்து வைத்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.










