சபாக் பெர்ணாமின் சுங்கை பெசாரில் உள்ள கம்போங் சுங்கை லிமாவ்மாட்டுத் தொழுவத்திற்கு அருகில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் அடையாளம் தெரியாத ஓர் ஆடவரின் சடலம் எரிந்த நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்றுக் காலை 7 மணியளவில், அப்பகுதி வழியாகச் சென்றபோது புகை மூட்டத்தைக் கண்ட பொதுமக்கள் அவ்விடத்தைச் சென்று பார்த்தபோது இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது என்று, சபாக் பெர்ணாம் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அகஸ் சலீம் முகமட் அலியாஸ் கூறினார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
“எனவே, சம்பவத்தின் நோக்கம் குறித்து எந்தவிதமான அனுமானங்களையும் செய்ய வேண்டாம் என்று அனைத்து தரப்பினரும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்தோடு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருப்பதால் எந்தவித ஊகங்களையும் பரப்ப வேண்டாம் என்றும் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் விசாரணைக்கு உதவ சபாக் பெர்ணாம் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு (IPD) வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அகஸ் சலீம் மேலும் கூறினார்.