சபா மாநில குடிமக்கள் அல்லாதவர்கள், குறிப்பாக நாடற்ற நபர்களைக் கண்காணிக்க சபா அரசாங்கம் பயோமெட்ரிக் தரவுகளை சேகரித்து வருகிறது.
இந்த நடவடிக்கை சபாவிலுள்ள வெளிநாட்டினரின் சரியான எண்ணிக்கையைக் கண்டறிய உதவும் என்று டத்தோ அர்மிசான் அலி இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
“முக அங்கீகாரம் உட்பட டிஜிட்டல் தரவு மூலம் வெளிநாட்டினரைப் பற்றிய முழுமையான தகவலைப் பெறுவதன் ஊடாக, துல்லியமான மற்றும் ஒரு தெளிவான கணக்கெடுப்பை பெற முடியும் ” என்று டத்தோ ஆண்டி முஹமட் சூர்யாடிக்கு (பிஎன்-கலாபக்கான்) கேட்ட கேள்விக்கு, அவர் இன்று வெள்ளிக்கிழமை (மே 26) எழுத்துப்பூர்வ பதிலில் இவ்வாறு கூறினார்.
குறிப்பாக சபாவின் கிழக்கு கடற்கரையில், நாடற்ற நபர்களின் நிலை தொடர்பான பிரச்சினைகளை நிர்வகிப்பதற்கான அரசாங்கத்தால் முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த வழிமுறைகள் எவை என ஆண்டி கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.