15-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஒற்றுமை அரசாங்கத்தில் இணைவதற்கு பாஸ்-கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்று, பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங், தெரிவித்தார்.
” பாஸ்-கட்சிக்கு பொதுத் தேர்தலுக்குப் பிறகு, அரசாங்கத்தில் இணைவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது… ஆனால் சமீபத்தில் அல்ல,” என்று அவர் இன்று தாமான் தமதுன் இஸ்லாத்தில் நடைபெற்ற திரெங்கானு அனைத்துலக உச்சநிலை மாநாடு 2023 (TIS2023) இல் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறினார்.
அந்த நேரத்தில், பல்வேறு அரசியல் கூட்டணி கட்சிகளும் PAS கட்சியைக் கவர்வதற்காக பல சலுகைகளை தர தயாராக இருந்தன, ஆனால் எமது கட்சி பெரிகாத்தான் நேசனல் (PN) உடன் கூட்டணி சேர்ந்திருப்பதில் உறுதியாக இருந்தது என்று கூறினார்.
சமீபத்தில் PAS தலைவர்களை ‘சில நபர்கள்’ தொடர்பு கொண்டு, ஒற்றுமை அரசாங்கத்தில் PAS சேருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் கடந்த செவ்வாயன்று, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அத்தகைய கூற்றுக்களை மறுத்தார்.
தவிர அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியும் அத்தகைய சலுகை எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.