முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மனைவியான டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோரிடமிருந்து, லெபனானை சேர்ந்த பிரபல மொத்த நகை வியாபாரி ஒருவர் மில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள நகைகளை கோரியதற்கு, தான் பொறுப்பேற்க முடியாது என்று நீதிமன்றத்தில் ரோஸ்மா பதிலளித்துள்ளார்.
Global Royalty Trading SAL (GRT) என்ற நகைக்கடை குறித்த நகைகளை தனக்கு அனுப்பியதாக ரோஸ்மா கூறினார், ஏனெனில் ரோஸ்மா அவர்களின் விருப்பமான வாடிக்கையாளராக இருந்ததாலும், அவற்றின் மூலம் குறித்த கடைக்காரர் விளம்பரம் பெற விரும்பினார்.
பிப்ரவரி 10, 2018 அன்று, வைர நெக்லஸ்கள், காதணிகள், மோதிரங்கள், வளையல்கள் மற்றும் தலைக்கிரீடங்கள் உட்பட 43 நகைகளை அனுப்பியதாக GRT தனது வழக்கில் கூறியது, ஒவ்வொன்றும் US$124,000 (RM519,183) முதல் US$38025 வரை மதிப்புக்கொண்டவை.
இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குடன் தொடர்புடைய இரண்டு காண்டோமினியம் பிரிவுகளில் சோதனை நடத்தப்பட்டு, காவல்துறையால் கைப்பற்றப்பட்ட நகைகளை மீட்கும் முயற்சியில் ரோஸ்மாவுக்கு எதிராக GRT வழக்குப் பதிவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்குக்கு பதிலளிக்கும் விதமாக, நகைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நியாயமான மற்றும் விவேகமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக ரோஸ்மா கூறினார். அத்தோடு மே 22, 2018 அன்று நகைகளின் நிலை குறித்து விசாரிக்க வாதியின் பிரதிநிதி தன்னைச் சந்தித்ததாக ரோஸ்மா மேலும் கூறினார்.
மே 22, 2018 தேதியிட்ட ஒரு கடிதத்தில், ரோஸ்மா குறித்த நகைகளைப் பெற்றதாக ஒப்புக்கொண்டார், ஆனால் அவை அனைத்தும் இனி தன் கைகளில் இல்லை என்றும், மேலும் போலீஸ் அதிகாரிகள் நகைகளைக் கைப்பற்றி வைத்திருப்பதாகவும் கூறினார்.
எனவே அக்டோபர் 23, 2019 அன்று, GRT உரிமைகோரலைத் திரும்பப் பெற முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்கும் முகமாக, குறித்த “நகைகளை தான் பெற்றுக்கொண்டாலும், தற்போது அவை தனது பாதுகாப்பில் இல்லை என்றும் அனைத்தும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, இந்நிலையில் அவை காணாமல்போனால் கூட அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்ட ஈட்டினை நான் பொறுப்பேற்க முடியாது “என்று நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர்கள் ஊடாக பதிலளித்தார்.









