கடந்த சில வாரங்களாக நாடு கடுமையான வெப்ப அலையை எதிர்கொண்டு வருகிறது. ஜூன் முதல் வலுவிழந்த ‘எல் நினோ’ பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவை எதிர்நோக்கக்கூடும் என்று இயற்கை வளம், சுற்றுப்புற, பருவநிலை மாற்ற அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமட் தெரிவித்தார்.
மேலும் நவம்பர் மாதத்திற்குள் இந்த வானிலை நிகழ்வின் தீவிரம் மிதமான அளவை எட்டக்கூடும் என்றார் அவர். இதனால், மழை பெய்வது 20 முதல் 40 விழுக்காடுவரை குறையக்கூடும் என்றார்.
‘எல் நினோ’ வானிலை மாற்றத்தால் ஏற்படும் சில விளைவுகள், அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதவாக்கில் தென்படக்கூடும் என்று அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.
தொடர்ந்து சில நாட்களாக வெப்பநிலை 38 டிகிரி செல்சியசைத் தாண்டும் என்றும் கடுமையான வெப்ப அலை ஏற்படுவதற்கான சாத்தியம் இதுவரை இல்லை என்று நிக் நஸ்மி கூறினார்.
“என்றாலும், வழக்கமான வெப்பநிலையைவிட சற்று கூடுதல் வெப்பநிலை நாட்டில் பதிவாகக்கூடும். அந்த அதிகரிப்பு 0.5 டிகிரி செல்சியசுக்கும் 1 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும்,” என்றும் அவர் கூறினார்.
‘எல் நினோ’ நிகழ்வால் ஏற்படும் வெப்பமான, வறண்ட வானிலை ஆசியாவில் எங்கும் உணவு உற்பத்தியாளர்களுக்கு மிரட்டலாக அமைகிறது. அதுபோல மலேசியா உட்பட இந்தோனேசியாவிலும் செம்பனை எண்ணெய், அரிசி உற்பத்தி பாதிப்படையக்கூடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.