அலோர் ஸ்டார்: பினாங்குக்கும் கெடாவுக்கும் இடையிலான உறவு குறித்த வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் உள்ள தகவல்கள் மாற்றப்படாது என்று கல்வி அமைச்சர் கூறுகிறார். பள்ளி பாடத்திட்டங்கள் நிபுணர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக ஃபத்லினா சிடெக் கூறினார்.
பாடத்திட்டம் அதன் சுழற்சியைக் கொண்டுள்ளது, மேலும் பாடத்திட்டம் நிபுணர்களால் கண்காணிக்கப்படுகிறது. எனவே இப்போதைக்கு, சுழற்சி முடியும் வரை நாங்கள் தற்பொழுதைய பாடத்திட்டத்தையே பின்பற்றுவோம்.
கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுகள் வரலாறு மட்டுமல்ல, அனைத்து பாடங்களுக்கும் செய்யப்படுகின்றன. நாங்கள் ஒரு அம்சத்தில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. ஆனால் நாங்கள் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்குவோம் என்று அவர் இன்று SMJK கீட் ஹ்வாவை பார்வையிட்ட பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
ஜூன் 8 அன்று, ஒரு மலாய் நாளிதழ் ப்கெடா மதம், கல்வி மற்றும் மனிதவளக் குழுவின் தலைவர் டத்தோ நஜ்மி அகமது பள்ளி பாடத்திட்டத்தில், குறிப்பாக பினாங்குக்கும் கெடாவுக்கும் இடையிலான உறவை வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் மேம்படுத்த வேண்டும் என்று முன்மொழிந்தார். தவறான வியாக்கியானத்தை தவிர்க்க இவ்வாறு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
பினாங்கில் கெடாவின் உரிமையைப் பற்றி மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி முகமட் நோர் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒரு வரலாற்று உண்மை என்றும் நஜ்மி கூறினார். அவரது கருத்து குறித்து சனுசியிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு ஜூன் 7ஆம் தேதி அலோர் ஸ்டாரில் உள்ள விஸ்மா தாருல் அமானில் உள்ள கெடா மந்திரி பெசார் அலுவலகத்தில் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாக காவல்துறைச் செயலர் டத்தோ நூர்சியா சாதுடின் கூறினார்.
பிரச்சினையை அதிகாரிகளிடம் விட்டுவிட வேண்டும் என்றார் ஃபத்லினா. காவல்துறையினர் இந்த பிரச்சினையை விசாரித்து வருகின்றனர். எனவே நாங்கள் அதை அவர்களிடமே விட்டு விடுகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.