ஜூன் 16 – 2015 முதல் 2019 வரை மலேசியா முழுவதிலும் உள்ள ஷரியா நீதிமன்றங்களில் பதிவான மொத்தம் 306,454 வழக்குகள் அல்லது 73 சதவீத வழக்குகள் விவாகரத்து பெறுவதற்காகவே செய்யப்பட்டன, அதில் 90 சதவீத வழக்குகள் மனைவியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று, ஷரியா நீதித்துறை மலேசியா (JKSM) தெரிவித்துள்ளது.
JKSM இன் தகவல் தொடர்புத் தலைவர், ரோஸியானா மாட் அமீன் கூறுகையில், சிலாங்கூரில் உள்ள 669 திருமணக் கலைப்பு வழக்குக் கோப்புகளை ஆய்வு செய்தபின், குடும்பங்கள் கலைவதற்கு பிரதான காரணியாக பணமே காணப்படுகிறது.
பணம் தவிர ஏனைய காரணிகள் கடன், மனைவியின் மோசமான அணுகுமுறை, பொறுப்பு இல்லாமை, தகவல் தொடர்பு இல்லாமை மற்றும் பயனற்ற தொடர்பு; துஷ்பிரயோகம்; மற்றும் பாலியல் கடமைகளை நிறைவேற்றாதது, திருப்தி அடையாதது, இயற்கைக்கு எதிரான உடலுறவு மற்றும் அடிக்கடி உடலுறவு போன்ற காரணிகளும் அடங்குகின்றன.
அதே நேரம் மற்ற பெண்கள் அல்லது ஆண்களுடனான உறவு, மாமியார் குறுக்கீடு மற்றும் பெற்றோர்/உறவினர்களின் ஆதரவின்மை; பலதார மணம்; மத காரணிகள் (மதக் கடமைகளை நிறைவேற்றாதது மற்றும் மத அறிவு இல்லாமை); உடல்நலம் (இயலாமை, நோய், பலவீனமான/வயதான மனைவி மற்றும் சந்ததி இல்லாத மனைவி); மற்றும் வயது குறைந்த திருமணம் காரணமாக திருமண முறிவுகள் ஏற்படுவதாக ரோசியானா கூறினார்.