செப்டம்பருக்குள் எல்லைப் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்படும் – ஜோகூர் மந்திரி பெசார்

மலேசியா – சிங்கப்பூர் இடையிலான நில எல்லையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தொடர்பான பிரச்சினைகளுக்கு, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் தீர்வுகாணப்படும் என்று ஜோகூர் மாநில மந்திரி பெசார் ஓன் ஹஃபிஸ் காஸி உறுதியளித்துள்ளார்.

ஜோகூர் பாருவில் உள்ள ‘CIQ’ எனும் சுங்க, குடிநுழைவு, தனிமைப்படுத்தலுக்கான வளாகங்களில் அவ்வாறு நெரிசல் ஏற்படுவதை அவர் சுட்டினார். இருப்பினும் அதுதொடர்பான பிரச்சினைகள் குறித்து அவர் மேலதிக விவரங்கள் எதையும் வெளியிடவில்லை.

மேலும் சிங்கப்பூருடனான நில எல்லையில் அமைந்திருக்கும் சோதனைச் சாவடிகளில் கூடுதலாக 250 குடிநுழைவு அதிகாரிகளைப் பணியமர்த்தவிருப்பதாகவும், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் கூடுதல் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் ஜோகூர் மாநில அரசு சென்ற வாரம் அறிவித்திருந்தது.

ஜோகூரில் செயல்படும் இரு ‘CIQ’ வளாகங்களிலும் சேவையை மேம்படுத்தத் தமது அரசாங்கம் கடப்பாடு கொண்டிருக்கிறது என்று கூறிய ஓன் ஹஃபிஸ், “போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாண்பதால் ஜோகூரைப் பற்றியும் மலேசியா குறித்தும் மக்கள் கொண்டுள்ள எண்ணத்தை மேம்படுத்த இயலும். அத்தோடு மாநிலத்திற்கு அன்றாடம் வருவோரின் வாழ்க்கையையும் மேம்படுத்த முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் சிக்கல்களுக்குத் தீர்வுகாண இயலும் என்று குடிநுழைவுத் துறையும் உள்துறை அமைச்சும் உறுதிகூறியிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பாலம் உலகின் ஆகப் பரபரப்பான நில எல்லைப் போக்குவரத்து நடைபெறும் இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் வழி அன்றாடம் 3 இலட்சாம் மலேசியர்கள் சிங்கப்பூர் சென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here