நேற்று கெமாமனிலுள்ள கம்போங் ஆயிர் புத்தேயில் உள்ள சுற்றுலாப் பகுதியில் ஏற்பட்ட திடீர் நீர்ப்பெருக்கில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர், மேலும் எண்மர் காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது.
நேற்று மாலையில் இருந்து இன்று அதிகாலை வரை தொடர்ந்து பெய்த கனமழையின் விளைவாகவே, இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் நம்பப்படுகிறது.
தகவலின் படி, சம்பந்தப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் இன்று மதியம் 12:45 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது, தொடர்ந்து மாலை 5 மணிக்கு 20 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் இரண்டாவதாக கண்டுபிடிக்கப்பட்டது என்று, கெமாமன் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஹன்யான் ரம்லான் கூறினார்.
காணாமல்போன எண்மரைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன என்றும் கூறினார்.
கண்டெடுக்கப்பட்ட இரு சடலங்களும் மேல் நடவடிக்கைக்காக கெமாமன் மருத்துவமனை தடயவியல் அறைக்கு அனுப்பப்பட்டதை ஹன்யான் உறுதிப்படுத்தினார்.
நேற்று மாலை 5 மணியளவில் சுற்றுலாவுக்காக மூடப்பட்டிருந்த பகுதிக்குள் 4-40 வயது வரையுள்ள அங்கத்தவர்களைக்கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் நுழைந்ததாக கூறப்படுகிறது.