பாலிக் பூலாவ், ஜூலை 9-
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் தற்போது ஜசெக வசம் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அந்தக் கட்சி வேட்பாளர்களைக் களமிறக்கும் என்று கட்சியின் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் நேற்று தெரிவித்தார்.
கடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் 4 மாநிலங்களில் ஜசெக 48 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்ததாக அவர் குறிப்பிட்டார். பினாங்கில் 19 இடங்களிலும் சிலாங்கூரில் 16 இடங்களிலும் நெகிரி செம்பிலானில் 11 இடங்களிலும் கெடாவில் 2 இடங்களிலும் ஜசெக வெற்றி பெற்றதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வெற்றி பெற்ற இந்தத் தொகுதிகள் அனைத்திலும் ஜசெக இந்த முறை போட்டியிடும் என்று அவர் குறிப்பிட்டார். போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் பற்றி பிறகு அறிவிப்புச் செய்யப்படும். மாநில அளவில் வேட்பாளர் பட்டியலை நான் இன்னும் பெறவில்லை என்றும் அவர் சொன்னார்.
பாலிக் பூலாவில் நேற்று மை லைசென்ஸ் பி2 எனும் திட்டத்தின் கீழ் வாகனமோட்டும் லைசென்சசுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
வரும் ஆகஸ்டு 12ஆம் தேதி பினாங்கு, திரெங்கானு, கிளாந்தான், சிலாங்கூர், கெடா, நெகிரி செம்பிலான் ஆகிய 6 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.