ஜோகூர் நகராண்மைக் கழகம் 68,000 பொது வாகன நிறுத்திவைப்பு இடங்களை நிர்வகித்து வருகிறது. அந்த இடங்களில் வாகனங்களை நிறுத்திவைக்க தற்போது காகித அட்டை கூப்பன்களை விநியோகித்து, நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த நடைமுறை இனிமேல் இருக்காது என்று ஜோகூர் நகராண்மைக் கழகம் அறிவித்துள்ளது.
அதற்குப் பதிலாக நகரில் வாகனங்களை நிறத்திவைக்க விரும்புவோர் MBJB Spot App என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு, அதன்வழி வாகன நிறுத்திவைப்புக் கட்டணத்தைச் செலுத்தும்படி வாகன ஓட்டுநர்களை அது ஊக்குவித்து வருகிறது.
ஜோகூர் நகராண்மைக் கழகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்குள் வாகன நிறுத்திவைப்புக் கூப்பன்களைப் பயன்டுத்த, இந்த ஆண்டே கடைசி ஆண்டாக இருக்கும் என்று ஜோகூர் மேயர் நூரசாம் ஓஸ்மான் கூறினார்.
கூப்பன் விற்பனையைக் கட்டம்கட்டமாக நகராண்மைக் கழகம் நிறுத்திவிடும். இப்போது கைவசம் இருக்கும் கூப்பன்கள் முடியும்வரை அவை கொடுக்கப்படும் என்று மேயர் தெரிவித்தார்.
நகர மன்றச் சேவைகளை மின்னிலக்க மயமாக்க முயற்சிகள் நடந்து வருகின்றன, அவற்றை ஒட்டி இந்த நடிவடிக்கை எடுக்கப்படுகிறது.
MBJB Spot App – 2ஆம் பதிப்பு செயலி இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இதுவரை 449,404 பேர் அதைப் பதிவிறக்கம் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
அதாவது ஜோகூர் நகரைச் சுற்றிலும் வசிக்கின்ற, வேலை பார்க்கின்ற மக்களில் கிட்டத்தட்ட பாதிப்போர் அதைப் பயன்படுத்துகிறார்கள். இவர்களில் சிங்கப்பூரர்களும் அடங்குவர் என்று மேயர் மேலும் கூறினார்.
MBJB Spot App 2016ல் முதன்முதலாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.