RM4.3 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; நால்வர் கைது

குளுவாங்கில் மூன்று வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட “ஓப்ஸ் காஸ்” நடவடிக்கையின் போது, போலீசார் நான்கு பேரை கைது செய்ததுடன், RM4.3 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கடந்த திங்கட்கிழமை (ஜூலை 17) மாலை 6.20 மணி முதல் இரவு 9.45 மணி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர், ஆணையர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் தெரிவித்தார்.

22 முதல் 30 வயதுடைய சந்தேகநபர்கள் போதைப்பொருள் பாவனைக்கு நேர்மறை சோதனை செய்ததாகவும் அவர்களில் ஒருவருக்கு முந்தைய குற்றப் பின்னணி இருப்பதாகவும் அவர் கூறினார்.

“இந்த ஆண்டு ஏப்ரல் 2023 முதல் அவர்கள் அந்த வீட்டை போதைப்பொருள் வைக்கும் கடையாகவும், அண்டை நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டதாக நம்பப்படும் பானப் பொதிகள் மற்றும் பால் தேநீர் பொதிகளில் வைத்து மறைத்துக் கொண்டுவரும் போதைப்பொருள், மீண்டும் பொதி செய்யும் இடமாகவும் அவர்கள் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 54.33 கிலோ எக்ஸ்டசி பவுடர், எரிமின் 5 மாத்திரைகள் (2.21 கிலோ), எக்ஸ்டசி மாத்திரைகள் (1.96 கிலோ), கெட்டமைன் (1.22 கிலோ) மற்றும் 346 கிராம் கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டதாக கமாருல் ஜமான் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை 202,042 போதைப்பித்தர்கள் பயன்படுத்த முடியும்” என்று அவர் கூறினார்.

மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் RM455,339 மதிப்புள்ள ஆறு கார்கள், நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்ததாக கமாருல் ஜமான் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் ஜூலை 18 முதல் ஜூலை 24 வரை ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here