பெந்தோங், அகஸ்ட்டு 3:
பெந்தோங்கிலுள்ள ஒரு சாலையோர டுரியான் விற்பனை செய்யும் கடையின் உதவியாளரிடம் துப்பாக்கி போன்ற தோற்றத்தில் இருந்த ஒரு ஆயுதத்தைக் காட்டி, அவரிடமிருந்து RM850 ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெனஸ் தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ள குறித்த கடையில் விற்பனை உதவியாளராக பணிபுரியும் 38 வயதான வெளிநாட்டுத் தொழிலாளிப் பெண் ஒருவரை, நேற்று பிற்பகல் 3.20 மணியளவில் புரோத்தோன் வீரா வகைக் காரில் சென்ற நபர் அணுகியதாக பெந்தோங் மாவட்ட காவல்துறைத் தலைவர், சய்னம் முகமட் கஹர் கூறினார்.
சந்தேக நபர் ஒரு கைத்துப்பாக்கியைப் போல தோற்றமளித்த ஆயுதத்தைக் காட்டி, டுரியான் பழங்களை விற்ற பணம் முழுவதையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு கடை உதவியாளரிடம் கோரினார், பின்னர் பணத்தை எடுத்துக் கொண்ட பிறகு குறித்த கொள்ளையன் காரில் தப்பித்துச் சென்றான் என்றும், இந்த சம்பவத்தில் கடை உதவியாளர் காயமடையவில்லை என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கொள்ளைச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள், 09-2222 2222 என்ற எண்ணில் பெந்தோங் மாவட்டக் காவல் மையத்திலுள்ள மாவட்டக் கட்டுப்பாட்டு மையத்தையோ அல்லது ஏதேனும் ஒரு காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளுமாறு சய்னம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.