மெர்சிங், ஆகஸ்ட்டு 17:
கடந்த திங்கட்கிழமை இயந்திரக் கோளாறு ஏற்பட்ட கப்பலில் இருந்து குதித்த நான்கு இந்தோனேசிய பணியாளர்கள், பூலாவ் பெமாங்கிலுக்கு மேற்கே நான்கு கடல் மைல் தொலைவில் தத்தளிக்க கண்டுபிடிக்கப்பட்டனர்.
மீட்கப்பட்டவர்களுள் தர்மன், 42, முர்ஹைரி, 57, அகஸ் முஸ்தபா, 25, மற்றும் சுஹந்த்ரி, 22, ஆகியோர் அடங்குவர் என்று, மலேசிய கடல்சார் அமலாக்க முகமை கடல்சார் மண்டல இயக்குநர், கமாண்டர் சுஹைசான் சாடின் கூறினார்.
பூலாவ் பெமாங்கில் அருகே சந்தேகத்திற்கிடமான கப்பல் ஒன்று ஓடுவது குறித்து தமது துறைக்கு தெரிவிக்கப்பட்டது என்றும், அதைத் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பெர்காசா 44 என்ற MMEA படகு சம்பவ இடத்திற்குத் அனுப்பப்பட்டது.
“கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) மாலை 6 மணியளவில் குறித்த கப்பல் தத்தளித்தது, பல நாட்களாக மோசமான வானிலை மற்றும் வலுவான அலைகள் காரணமாக தொடர்பு கிடைக்காததால், கப்பல் ஊழியர்கள் உதவிக்காக கப்பலில் இருந்து கடலில் குதித்தனர்,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், மெர்சிங் மரைன் போலீஸ் ஜெட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக அவர்கள் மெர்சிங் கடல்சார் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சுஹைசன் கூறினார்.
மீட்கப்பட்ட அனைவரும் இந்தோனேசிய தூதரகம் மூலம் திரும்பவும் அவர்களின் ஆவணங்களை பெற்று, சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.