ஜோர்ஜ் டவுன், அகஸ்ட்டு 21:
பினாங்கு மாநிலம் முழுவதும் சட்டவிரோத பந்தயம் நடைபெறும் என நம்பப்படும் பகுதிகளில் நேற்று, போலீசார் மேற்கொண்ட சோதனையில் 50 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
பினாங்கு போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் (JSPT) நடவடிக்கையானது தீவின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு மாவட்டங்களில் உள்ள பல இடங்களிலும், வடக்கு செபெராங் பிறை (SPU) மற்றும் தெற்கு செபெராங் பிறை (SPT) ஆகிய இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.
வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், ஏழு அதிகாரிகள் மற்றும் 64 போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை பணியாளர்கள் ஈடுபட்டதாக பினாங்கு காவல் துறையினர் தங்கள் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
“சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 64(1) இன் கீழ் 50 மோட்டார் சைக்கிள்களைக் கைப்பற்றிய போலீசார், பந்தயம் அல்லது ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியதற்காக நான்கு பேரைக் கைது செய்தனர், சட்டத்தின் பிரிவு 42 (1) இன் படி வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
“போலி வாகன பதிவு எண்கள் தொடர்பான சட்டத்தின் பிரிவு 108 இன் கீழ் மற்றொரு நபரையும் போலீசார் கைது செய்தனர் மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக மொத்தம் 230 சம்மன்கள் வழங்கப்பட்டன” என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.