தைப்பிங்:
கடந்த வாரம் ஒரு மூதாட்டியிடம் கொள்ளையடித்ததோடு அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக, இரண்டு மாதங்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்ட முன்னாள் குற்றவாளி ஒருவர், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட எஸ். சரண், 32, என்பவருக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுகளும் , நீதிபதி நபிஷா இப்ராகிம் முன்நிலையில் தமிழில் மொழிபெயர்ப்பாளரால் வாசிக்கப்பட்ட பின்னர், அவர் தான் குற்றமற்றவர் என்று கூறி, விசாரணை கோரினார்.
குற்றப்பத்திரிகையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் 15 ஆகஸ்ட் 2023 காலை 8.30 மணிக்கு தைப்பிங்கின் தாமான் அசாம் மஜூவில் உள்ள ஒரு வீட்டில், 75 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
மேலும் குறித்த மூதாட்டியிடம் RM10 ரொக்கம் மற்றும் ஒரு தங்கச் சங்கிலியை கொள்ளையடித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது, அத்தோடு கொள்ளையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் வேண்டுமென்றே கத்தியால் பாதிக்கப்பட்டவருக்கு காயம் ஏற்படுத்தினார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது .
எவ்வாறாயினும், குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் வழக்கறிஞர் எவரும் ஆஜராகவில்லை, இரண்டு மாதங்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட புதிய காரணத்தின் அடிப்படையில் சந்தேகநபர் ஜாமீன் தொகையை குறைக்க விண்ணப்பித்தார்.
இருப்பினும் நீதிபதி நபீஷா, மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து ஒரு தனிநபர் உத்தரவாதத்துடன் RM30,000 ஜாமீன் வழங்கினார், மேலும் வழக்கு முடியும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவருக்கோ, அரசு தரப்பு சாட்சிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என்ற கூடுதல் நிபந்தனையும் விதித்தது.
வழக்கறிஞர் நியமனம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான வழக்கை மீண்டும் செவிமடுக்க வரும் செப்டம்பர் 25 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.








