பிரான்ஸ் தூதர் உடனே வெளியேற வேண்டும்: நைஜர் ராணுவ ஆட்சியாளர்கள் அதிரடி உத்தரவு

நைஜரில் கடந்த மாதம் ராணுவ கிளர்ச்சி ஏற்பட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பாதுகாப்பின்மையையும், பொருளாதார நலிவையும் காரணம் காட்டி, அங்கு அதிகார மாற்றம் ஏற்பட்டது. இதில் பஸோம் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்டு. ராணுவ அமைப்பின் தலைவர் அப்துரஹ்மானே சியானி புதிய அதிபராக பதவியேற்றார்.

ஆனால் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்க மறுத்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு, மீண்டும் பஸோம் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. தேவைப்பட்டால் ராணுவ பலத்தை பிரயோகிப்போம் எனவும் எச்சரித்திருந்தது.

இதற்கு நைஜர் ராணுவ ஆட்சியாளர்கள் பதிலடி கொடுத்ததுடன், தங்கள் நாட்டை தங்களால் பாதுகாத்துக்கொள்ள முடியும் என கூறினர். இந்நிலையில், நைஜர் நாட்டில் உள்ள பிரான்ஸ் தூதர் சில்வெயின் 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ராணுவ தலைமை உத்தரவிட்டுள்ளது.

நைஜர் நாட்டின் நலன் கருதி வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்த கூட்டத்தை பிரான்ஸ் தூதர் புறக்கணித்ததாகவும், நைஜரின் நலன்களுக்கு முரணாக பிரெஞ்சு அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இருப்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளது. ஆனால் நைஜரின் ராணுவ ஆட்சியாளர்களுக்கு பிரான்ஸ் தூதரை வெளியேறும்படி கேட்க அதிகாரம் இல்லை என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் கூறியது.

முன்னாள் பிரெஞ்சு காலனி நாடான நைஜர், கடந்த மாதம் ஏற்பட்ட கிளர்ச்சிக்கு முன்பு வரை பிரான்சின் நட்பு நாடாக இருந்தது. ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து பிரெஞ்சு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. பிரான்ஸ் நாடு தங்கள் உள்விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here