கோலாலம்பூர்:
3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்கள் தொடர்பான சிறுமைப்படுத்தும் செய்திகளை வெளியிட்டதாக நம்பப்படும் இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
சம்பந்தப்பட்ட இரு சந்தேக நபர்களும் ஆட்சியாளர்களுக்கு எதிரான அவதூறான அல்லது துரோக உணர்வுகளைத் தூண்டும் வகையில் பதிவுகளை பதிவேற்றியதற்காக கைது செய்யப்பட்டதாக, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் (ஜேஎஸ்ஜே) இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜெயின் கூறினார்.
“ஜோகூர் ஆட்சியாளரை அவமதிப்பு செய்தது தொடர்பாக 41 வயதான முதல் சந்தேக நபர், ஈப்போ, கம்போங் சுங்கை காத்தியில் கைது செய்யப்பட்டார்.
“47 வயதுடைய இரண்டாவது சந்தேக நபர், சிலாங்கூர் சுல்தானுக்கு எதிராக அவதூறான செய்திகளைப் பதிவேற்றினார் என்ற சந்தேகத்தின் பேரில் பேராக்கின் லங்காப்பில் வைத்து கைது செய்யப்பட்டார்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் இருவரும் இன்று முதல் செப்டம்பர் 2 ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக முஹமட் ஷுஹைலி தெரிவித்தார்.