கோலாலம்பூர்:
மலேசியா ஏர்லைன்ஸ் இந்தியாவுக்கு மூன்று புதிய வழித்தடங்களைத் திறக்கிறது.
அதாவது இந்தியாவின் மூன்று புதிய இடங்களான அமிர்தசரஸ், திருவனந்தபுரம் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களுக்கு மலேசியாவிலிருந்து நேரடி விமான சேவையை ஆரம்பிக்கிறது என்று, மலேசிய ஏவியேஷன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர், டத்தோ கேப்டன் இஷாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த வழித்தடங்களில் முதல் விமானங்கள் முறையே நவம்பர் 8, நவம்பர் 9 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் சேவையை வழங்கும் என்று மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமிர்தசரஸ் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இரண்டிற்கும் விமானங்கள் வாரத்திற்கு இரண்டு முறை என்ற அதிர்வெண் கொண்டிருக்கும், அதே நேரத்தில் அகமதாபாத்திற்கு விமானங்கள் வாரத்திற்கு நான்கு முறையும் சேவையில் ஈடுபடும்.
“மலேசியா ஏர்லைன்ஸுக்கு இந்தியா ஒரு முக்கிய சந்தையாக உள்ளது, எனவே இந்தியாவிற்கு மூன்று புதிய வழித்த்தடங்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.மேலும் இது பயணிகளுக்கு கூடுதல் வசதியை வழங்குகிறது” என்று இஷாம் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இந்தக்கூட்டத்தில் மலேசிய ஏவியேஷன் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மட் லக்மான் முஹமட் அஸ்மி மற்றும் தலைமை வணிக அதிகாரி டெர்சனிஷ் அரேசந்த்ரான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.