ரியாத்:
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக வாதிடுவதில் மலேசியாவின் உறுதியான நிலைப் பாடு குறித்து மேற்குலகில் உள்ள சில நாடுகளின் எதிர்வினைகள் இருக்கும் என்பதை மலேசியா அறிந்திருப்பதாகவும் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார்.
பாலஸ்தீனம் மற்றும் காஸாவில் இஸ்ரேல் செய்து வரும் அட்டூழியங்கள் குறித்தும், சில சிறிய ஆபத்துகள் இருந்தாலும், அதைத் தவிர வேறு வழியில்லை என்று பிரதமர் கூறினார்.
“எனக்கு வேறு வழியில்லை, ராஜதந்திரம் என்று வரும்போது, நாம் பொறுத்துக் கொள்ளக் கூடிய விஷயங்கள் உள்ளன; அதே நேரத்தில், குழந்தைகள் மற்றும் பெண் களின் உயிர்களை உள்ளடக்கிய கொலைகளால் காஸாவில் நடக்கும் கொடுமைகளை சகித்துக்கொள்ளமுடியாது. அது பெரும் கவலையளிக்கிறது” என்றார் அவர் .
இன்று GCC உச்சி மாநாட்டின் போது தனது இரண்டு நாள் பணி பயணத்தை முடிப்பதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், பாலஸ்தீன விவகாரத்தில் மலேசியா ஆதரவு நிலையைத்தான் கடைப்பிடிக்கும் என்றும் இஸ்ரேலிய அரசாங்கத்தின் வன்முறையை கண்டிப்பதாகவும் கூறினார்.
இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்திற்கு (ICJ) கொண்டு செல்ல ஆசியான் மற்றும் ஜிசிசி நாடுகளிடையே மலேசியா முன்முயற்சி எடுக்குமா என்று கேட்டதற்கு, அரசாங்கம் தனது கருத்தை பலமுறை வெளிப்படுத்திவிட்டது என அன்வார் கூறினார்.
“நான் பல ஆசிய நாடுகளின் தலைவர்கள், பஹ்ரைன் மன்னர் (ஹமத் பின் இசா பின் சல்மான்), ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பட்டத்து இளவரசர் (ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்) மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் ஆகியோருடனும் இது குறித்து கலந்துரையாடியிருக்கிறேன் என்கிறார் அவர்.
“மேலும் நான் ரியாத்தில் இருந்து ரிசெப் தையிப் எர்டோகன் (துருக்கிய அதிபர்) மற்றும் அப்தெல்-ஃபத்தா அல்-சிசி (எகிப்திய அதிபர்) ஆகியோரை சந்திக்கவும் செல் கிறேன். அவர்கள் அனைவரும் பாலஸ்தீன விவகாரத்தில் கவலை கொண்டுள்ளனர். பாலஸ்தீன பிரச்சினையில் நாங்கள் தனியாக இருக்க விரும்பவில்லை. நாங்கள் விவாதிப்போம். அவர்களுடன், ஒரு முடிவெடுப்பதில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு பல உலகத் தலைவர்களை நான் ஏற்கனவே அழைத்துள்ளேன்,” என்று அவர் கூறினார்.
நாட்டிற்கு கவனம் தேவை என்றாலும், பாலஸ்தீனியர்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் வாதிடுவது மனிதாபிமானப் பொறுப்பு என்றும் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.




















