கோலாலம்பூர்:
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, நாட்டிலுள்ள 6 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 25,938 பேராக இருந்தநிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 28,310 ஆக உயர்ந்துள்ளது.
இதில் அதிகளவானோர் பாதிக்கப்பட்ட மாநிலமாக கிளந்தான் உள்ளது. அங்கு 17,466 பேர் தங்கள் வாழ்விடங்களைவிட்டு வெளிஏற்றப்பட்டு அங்குள்ள 89 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை முகமை நிறுவனம் (NADMA) தெரிவித்துள்ளது.
திரெங்கானுவில், நேற்று மாலை 125 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 10,199 பேருடன் ஒப்பிடும்போது, இன்று காலை அங்குள்ள 113 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 10,103 ஆகக் குறைந்துள்ளது.
அதேநேரத்தில் பகாங்கில்வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 590 பேர் அங்குள்ள 13 மையங்களில் தங்கியுள்ளனர்.
சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் இன்னும் கோலா லங்காட் மாவட்டத்தில் உள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சபாவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 169 பேர் அங்குள்ள மூன்று நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், ஜோகூரில், 83 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அங்குள்ள ஒரு நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.