ஜோகூர் மாநிலத்திற்குப் பெருமை சேர்த்தது கேலாங் பாத்தா தமிழ்ப்பள்ளி
(கிருஷ்ணன் ராஜு)
ஜோகூர்பாரு, டிச.27-
பினாங்கில் டிசம்பர் 23 முதல் 24 வரை மீஃபா ஏற்பாட்டில் தேசிய அளவிலான 12 வயதிற்கு உட்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவிகளுக்காக முதல் முறையாக நடத்தப்பட்ட கால்பந்தாட்டப் போட்டியில் கேலாங் பாத்தா தமிழ்ப்பள்ளி மாணவிகள் நாணயத்தை சுண்டி நிர்ணயிக்கும் முடிவில் முதலாம் இரண்டாம் நிலைக்குப் போட்டியிடும் வாய்ப்பை இழந்து மூன்றாம் நிலையை அடைந்தது.
இருப்பினும், அரங்கமே அதிரும் வண்ணம் மிகச் சிறப்பான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தி, கெலாங் பாத்தா தமிழ்ப்பள்ளி மாணவிகள் பார்வையாளர்களின் பாராட்டினைப் பெற்றனர். ஜீஃபா கால்பந்தாட்டப் போட்டியில் கேலாங் பாத்தா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தாக்குதல் ஆட்டக்காரர் மாணவி தர்ஷிகா ஸ்ரீ சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமையாசிரியர் குமாரி கோகிலா நாகலிங்கம், இணைப்பாடத் துணைத் தலைமையாசிரியரும் துணைப் பயிற்றுநருமான அ.சோமதேவன், முன்னணி பயிற்றுநர் இரமேஷ் இராமசாமி, குழு நிர்வாகிகளான ஆசிரியை குமாரி கேஷவர்த்தினி, திருமதி சுமதி செங்கல் ரோய், கேலாங் பாத்தா தமிழ்ப்பள்ளி பெற்றோர் -ஆசிரியர் சங்கம், பெற்றோர் சமூக உதவிக் குழுவினர் ஆகியோருக்கும் கேலாங் பாத்தா தமிழ்ப்பள்ளியின் பெற்றோரும் மாணவர்களும் பாராட்டினையும் வாழ்த்தினையும் நன்றியினையும் தெரிவித்துக் கொண்டனர்.