புத்ராஜெயா:
நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் மொத்தம் 4,893.73 ஹெக்டேர் விவசாய நிலங்களும், 2,269 விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர், இதன் விளைவாக சுமார் RM22,823,601 இழப்பு ஏற்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
இதில் கிளந்தான் மாவட்டம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அவர், இன்று நடந்த வெள்ளநிலைமை தொடர்பான ஒரு ஊடக மாநாட்டில் கூறினார்.
மேலும் 51 சுகாதார வசதிகளை வழங்குகின்ற மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் மிக அதிகமாக கிளந்தானில் 23, பகாங்கில் 17 , திரெங்கானுவில் 11 இடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவருமான அவர் கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாத ஆரம்பத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, பல மாநிலங்களில் மொத்தம் 62,467 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர், அத்தோடு 19,204 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாவட்ட அலுவலகங்கள் நியாயமான முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் என்று தான் நம்புவதாகவும் அஹ்மத் ஜாஹிட் கூறினார்.
வரும் பிப்ரவரி முதல் மார்ச் வரை சபா மற்றும் சரவாக்கில் ஏற்படும் வெள்ளப் பேரழிவை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NADMA) உஷார் நிலையில் இருப்பதாக ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சராக இருக்கும் அஹ்மட் ஜாஹிட் தெரிவித்தார்.







