ஜார்ஜ் டவுன்:
பினாங்கில் இணைய சூதாட்ட அழைப்பு மையத்தை நடத்திய குற்றச்சாட்டில் 6 பேர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) மாவட்ட நீதிமன்ற நீதிபதி முகமட் அஸ்லான் பஸ்ரி முன்னிலையில் மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் மூவரும் தாம் குற்றமற்றவர்கள் என்று கூறி விசாரணை கோரினர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் கிராஃபிக் வடிவமைப்பு, சந்தைப்படுத்தல் மற்றும் மனித வளத் துறைகளில் பணிபுரிகிறார்.
குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், அவர்கள் ஜனவரி 16 ஆம் தேதி காலை 10.45 மணியளவில் ஜெலுதாங்கில் உள்ள வணிக மையத்தில் அமைந்துள்ள ஜெனிபீ Sdn.Bhd என்ற நிறுவனத்தில் கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் வீ சாட் ஆகியவற்றைப் பயன்படுத்தி இணைய சூதாட்டத்தை ஊக்குவித்ததாக கூறப்படுகிறது.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 34 உடன் படிக்கப்பட்ட காமன் கேமிங் ஹவுஸ் சட்டம் 1953 இன் பிரிவு 4(1)(g) இன் கீழ் (பொது நோக்கத்திற்காகப் பல நபர்களால் செய்யப்படும் குற்றச் செயலுக்கு) – RM5,000 முதல் RM50,000 வரை அபராதம் விதிக்கப்படும். அத்தோடு குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.