பணிப்பெண் மரணத்துக்கு காரணமான முதலாளி 71/2 இலட்சம் வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பெட்டாலிங் ஜெயா:

முதலாளியின் கொடுமை காரணமாக உயிரிழந்த இந்தோனேசியப் பணிப்பெண்ணின் தாயாருக்கு 750,000 ரிங்கிட்டை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று பினாங்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடலினா லிசாவ் என்ற அந்தப் பணிப்பெண், கடந்த 2018 பிப்ரவரி 10ஆம் தேதி புக்கிட் மெர்த்தாஜாமில் இறந்துபோனார்.

இந்நிலையில், அடலினாவின் முதலாளி ஆர்.ஜெயவர்த்தினியும் அவருடைய தாயார் எஸ்.அம்பிகாவும் கொடுமைப்படுத்தி, காயம் விளைவித்ததே அடலினா உயிரிழக்க காரணம் என்று நீதிபதி ஆனந்த் பொன்னுதுரை தமது தீர்ப்பில் கூறினார்.

“பிரதிவாதிகளின் அலட்சியம், மனித உரிமை மீறலாக வகைப்படுத்தப்படுகிறது,” என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

இதனையடுத்து, அடலினாவின் தாயாருக்கு 750,000 ரிங்கிட் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.

நியாயப்படுத்த முடியாதபடி அடலினா நடத்தப்பட்டதை மருத்துவச் சான்றுகள் காட்டுவதாக நீதிபதி ஆனந்த் கூறினார்.

பிரதிவாதிகளான ஜெயவர்த்தினியும் அம்பிகாவும் அடலினாவை நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது என்றும் அடலினாவின் உரிமைகளை அவர்கள் சிறிதும் பொருட்படுத்தவில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.

மற்றவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவே இத்தகைய தீர்ப்பை வழங்குவதாகவும் அவர் சொன்னார்.

“முதலாளியின் கொடுமையால் அடலினாவின் வாழ்க்கை பறிக்கப்பட்டுவிட்டது என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது,” என்று ஆனந்த் குறிப்பிட்டார்.

நீதிமன்ற விசாரணை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டும் வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 8) அம்பிகாவும் ஜெயவர்த்தினியும் நீதிமன்றத்திற்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து ஜெயவர்த்தினியின் வீட்டில் தன் மகள் வேலை செய்து வந்ததாக அவருடைய தாயார் யோகானா கூறினார்.

மாதம் 1,500 ரிங்கிட் சம்பளம் தரப்பட வேண்டிய நிலையில், தன் மகள் இறக்கும் வரையிலும் அவருக்குச் சம்பளமே தரப்படவில்லை என்றும் யோகானா சொன்னார்.

“அம்பிகா என் மகளை நாயுடன் படுக்க வைத்தார். அதனால், அவரது கையில் நாய் கடித்தது. உரிய சிகிச்சை வழங்கப்படாததால் நீண்ட காலம் அவர் வலியால் அவதிப்பட்டார்,” என்றும் யோகானா தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், கடந்த 2019 ஏப்ரல் 18ஆம் தேதி ஜார்ஜ் டவுன் உயர் நீதிமன்றம் அம்பிகாவை விடுவித்தது. பின்னர் 2022 ஜூன் 23ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றமும் அவரது விடுதலையை உறுதிப்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here