ஜோகூர் பாருவில் 18 மாத ஆண் குழந்தையை அவரது தாயார் கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஆறு பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் எம். குமார் தெரிவித்தார். சாட்சிகளில் ஒருவராக குழந்தையின் தந்தை, மற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அண்டை வீட்டாரும் அடங்குவதாக அவர் கூறினார். விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களின் வாக்குமூலங்களை தொடர்ந்து நாங்கள் பல சாட்சிகளை அழைத்துள்ளோம்.
குழந்தையின் தாயான முக்கிய சந்தேக நபர் மார்ச் 23 வரை பெர்மாய் மருத்துவமனையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆரம்ப விசாரணைகள் அவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதைக் காட்டுகின்றன. ஆனால் நாங்கள் இன்னும் மருத்துவமனையின் அறிக்கைகளுக்காகக் காத்திருக்கிறோம் என்று அவர் இங்குள்ள ஒரு வணிக வளாகத்திற்கு அருகிலுள்ள ரமலான் சந்தையை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
32 வயதான சந்தேகநபர் தலையில் சில காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குமார் கூறினார். ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17), பாசீர் கூடாங்கில் உள்ள வீட்டில் தனது ஆண் குழந்தையை கழுத்தை அறுத்து கொன்றதாக அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, சனிக்கிழமை (மார்ச் 16) மதியம் 1.30 மணியளவில் குழந்தை இறந்தது குறித்து புகார் அளிக்கப்பட்டதாக குமார் கூறினார். ஆரம்ப விசாரணையில், சந்தேக நபர் இறந்தவரின் ரத்த வெள்ளத்தில் இருக்கும் புகைப்படத்தை அவரது கணவருக்கு அனுப்பியதாகக் கண்டறியப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமை (மார்ச் 18), ஜோகூர் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் லிங் தியான் சூன், மனநல மதிப்பீட்டிற்காக அந்தப் பெண் பெர்மாய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகக் கூறினார். டாக்டர்கள் அவரை மதிப்பீடு செய்வதற்காக அந்தப் பெண் சுமார் ஒரு வாரம் மருத்துவமனையில் இருப்பார் என்றும் லிங் கூறினார்.