கடவுளால் அனுப்பப்பட்டவர் 22 பேருக்கு மட்டுமே வேலை செய்கிறார்: ராகுல்

கடவுள் அனுப்பியதாக கூறும் பிரதமர் நரேந்திர மோடி 22 பேருக்கு மட்டுமே வேலை செய்து வருவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்தார். ஒடிஸாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, பூமிக்கு தன்னை கடவுள் அனுப்பியதாகவும், தான் பயாலாஜிகளாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று நம்புவதாக புதன்கிழமை தெரிவித்திருந்த நிலையில், ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவுபெறுகிறது. இந்த நிலையில், புதுதில்லியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

நமது நாட்டின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்தாந்தத்தையும் சிந்தனையையும் நமது அரசியலமைப்பு பிரதிபலிக்கிறது. ஆனால், அரசியல் சாசனத்தை அழிப்பதாக பாஜக கூறுகிறது. கனவு காண வேண்டாம், உங்களால் ஒருபோதும் அதைச் செய்ய முடியாது என்று அவர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். உங்கள் முன் கோடிக்கணக்கான மக்களுடன் காங்கிரஸ் நின்று கொண்டுள்ளது, நாட்டின் அரசியலமைப்பை யாராலும் அழிக்க முடியாது.

இடஒதுக்கீட்டை முடிவுக்கு வரவுள்ளதாக பாஜக – ஆர்எஸ்எஸ் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால், நாங்கள் இடஒதுக்கீட்டுக்கான 50 சதவிகித வரம்பை நீக்கி, அதனை 50 சதவிகிதத்துக்கு மேல் உயர்த்துவோம். தன்னை கடவுள் அனுப்பியதாக மோடி கூறுகிறார். கரோனா காலகட்டத்தில் மக்கள் இறந்து கொண்டிருக்கும்போது, செல்போனில் டார்ச் அடிக்கச் சொன்னார். கடவுள் எப்படிப்பட்ட மனிதரை அனுப்பியுள்ளார்?.

நாட்டில் வெறும் 22 பேருக்கு மட்டுமே கடவுளால் அனுப்பப்பட்டவர் வேலை செய்கிறார். நாட்டின் ரயில் நிலையம், விமான நிலையம், துறைமுகங்கள் என அனைத்து சொத்துகளையும் அதானிக்கு அளித்துவிட்டார். அதே சமயம், ஒரு ஏழை கடன் தள்ளுபடி, சாலைகள், மருத்துவமனைகள், கல்வி என எது கேட்டாலும் மோடிக்கு அது முக்கியமில்லை.

பெரும் முதலாளிகளுக்கு மோடி அளித்த பணத்தை கொண்டு துபை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முதலீடு செய்துள்ளார். ஆனால், நாங்கள் ஏழைகளுக்கு பணம் கொடுத்தால், நீங்கள் சட்டை, பேண்ட் வாங்குவீர்கள். இதையெல்லாம் நீங்கள் வாங்கத் தொடங்கும் போதே, இந்தியாவில் மூடப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் தொடங்கப்படும். அதே தொழிற்சாலைகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here