அண்மையில் அனுசரிக்கப்பட்ட அனைத்துலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உயர் சக்தி மோட்டார் சைக்கிள் குழுவான லெஜெண்டரி ரைடர் மலேசியா கிளப் பொறுப்பாளர்கள் அண்மையில் பெந்தோங் காராக் நெடுஞ்சாலை வழியில் உள்ள ஒரு நிலத்தில் 40 பழக் கன்றுகளை நட்டனர்.
இந்நிகழ்ச்சியில் இக்கிளப்பைச் சேர்ந்த 35 உறுப்பினர்கள் பங்கேற்றனர். மரம் நடும் நிகழ்ச்சியை கிளப்பின் தோற்றுநர் ஆர். மகேந்திரமணி தொடங்கிவைத்தார்.
பின்னர் இந்தக் கிளப்பின் தலைவர் அஷ்ராஃப் முஹிடின் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியை கிளப்பின் இஎஸ்ஜி எனப்படும் சுற்றுச்சூழல், சமூகம், விழிப்புணர்வுப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுகுமாரன் வழிநடத்தினார்.

இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாப்பது, அதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை விதைப்பது போன்றவற்றில் கிளப் அதீத கவனம் செலுத்தி வருகின்றது என்று சொன்னார்.
இங்கு பழக் கன்றுகளை நடுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இந்த மரங்கள் காய்க்கத் தொடங்கியதும் இங்கு வாழும் பறவைகள், பிராணிகள் ஆகியவற்றுக்கு உணவாகிடும் என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகேந்திரமணி, எங்கள் கிளப் முறைப்படி சங்கப் பதிவிலாகாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் மோட்டார் சைக்கிள் பயணம் மட்டும் அன்றி சுற்றுச்சூழல், சமூகம், விழிப்புணர்வு ஆகிய அம்சங்கள் மீதும் கவனம் செலுத்தி வருகிறோம். மேலும் அவ்வப்போது எங்களால் முடிந்த சமூக நல உதவிகளையும் செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
தற்போது சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பழக்கன்றுகளை நட்டுள்ளோம் என்றார் அவர்.









