படுக்கை அறையில் சுயநினைவு இல்லாத ராணுவ வீரர்.. 60 நாளில் மனைவி சிக்கியது எப்படி?

சென்னை: சென்னை ஆவடி அருகே அதீத மது போதையில் படுக்கை அறையில் சுயநினைவின்றி கிடந்தததாக கூறி ராணுவ வீரரை மருத்துவமனையில் மனைவி அனுமதித்துள்ளார். அங்கு அவரது நாடகம் அம்பலமாகி உள்ளது.  சென்னை ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டையில் உள்ள ராணுவ குடியிருப்பில் வாழ்ந்து வந்தவர் வேளாங்கண்ணி தாஸ். இவருக்கு 38 வயது ஆகிறது. திருச்சியைச் சேர்ந்த இவர் ராணுவ படை பிரிவில் நாயக் ஆவார். ஆவடி இந்திய ராணுவ படையில் பணிபுரிந்து வந்தார். வேளாங்கண்ணி தாஸின் மனைவி லீமா ரோஸ்மேரி (36).

இவர், சென்னை கிண்டியில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மகளை திருச்சியில் உள்ள பாட்டி வீட்டில் படிக்க வைத்து வளர்த்து வருகிறார்கள். இதனால் வேளாங்கண்ணி தாஸ், அவரது மனைவி லீமா ரோஸ்மேரி இருவர் மட்டும் இங்கு தனியாக வசித்து வந்துள்ளார்கள். வேளாங்கண்ணி தாஸ் கடந்த மே மாதம் 10ஆம் தேதி இரவு அதீத மது போதையில் படுக்கை அறையில் சுயநினைவின்றி படுத்திருந்தாரம்.

அதை கண்ட அவரது மனைவி லீமா ரோஸ்மேரி, உடனே அவரை மீட்டு ஆவடியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வேளாங்கண்ணி தாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் வேளாங்கண்ணி தாஸ், கழுத்தில் காயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்து. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரது மனைவி லீமா ரோஸ்மேரியிடம் தீவிரமாக விசாரித்தார்கள். அப்போது அவர், கணவரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, மதுபோதையில் இறந்ததாக நாடமாடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து லீமா ரோஸ்மேரியை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறிய தகவல்களை பார்ப்போம்.

வேளாங்கண்ணி தாஸ் தினமும் மது அருந்திவிட்டு போதையில் வீட்டுக்கு வந்து லீமா ரோஸ்மேரியிடம் தகராறில் ஈடுபட்டாராம். தொடர்ந்து அவரது மனைவியின் பெற்றோரையும் அவதூறாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த லீமா ரோஸ்மேரி, சம்பவத்தன்று மது போதையில் படுத்திருந்த கணவர் வேளாங்கண்ணி தாசை, புடவையால் கழுத்தை நெரித்து கொலை செய்தாராம். பின்னர் மது போதையில் சுயநினைவின்றி இறந்து கிடந்ததாக அனைவரிடமும் கூறி நாடகமாடி உள்ளாராம். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்ததால் போலீசில் மாட்டிக்கொண்டுள்ளார்.

இந்த தகவலை போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஆவடி இன்ஸ்பெக்டர் வேலு, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினார். பின்னர் கணவரை கொன்றுவிட்டு நாடகமாடியதாக கைதான லீமா ரோஸ்மேரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். கணவனை கொன்றுவிட்ட நாடகமாடிய மனைவி பிரேத பரிசோதனை அறிக்கையால் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here