நீலாயில் நடத்தப்பட்ட ஒரு சோதனையில் 8.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கிட்டத்தட்ட 274 கிலோ மெத்தாம்பேத்தமைனைக் கைப்பற்றி போதைப்பொருள் கும்பலின் செயல்பாடுகளை சுங்கத்துறை முடக்கியது. போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட பல்நோக்கு வாகனத்தை ஓட்டிச் சென்ற 35 வயது பெண் ஒருவரும் தடுத்து வைத்துள்ளதாக சுங்கத் துணை இயக்குநர் ஜெனரல் (அமலாக்கம் மற்றும் செயல்பாடு) ரிபுவான் அப்துல்லா தெரிவித்தார். ஜூலை 5 ஆம் தேதி பூச்சோங் பண்டார் புத்ரியில் நடந்த ஒரு நடவடிக்கையின் போது போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.
சீன டீ லேபிள்களுடன் கூடிய 268 சிறிய பாக்கெட்டுகளில் போதைப்பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த பாக்கெட்டுகள் 13 பெரிய பாக்கெட்டுகளாக பொதி செய்யப்பட்டு அரிசியாக அறிவிக்கப்பட்டது என்று அவர் இங்கு அருகில் உள்ள கம்போங் ஜிஞ்சாஜானில் உள்ள சுங்க (போதை மருந்து) தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
பூர்வாங்க விசாரணையின் அடிப்படையில், சந்தேக நபர் ஒரு வட மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு 1,320 ரிங்கிட்டுக்கு MPVயை வாடகைக்கு எடுத்ததாக ரிபுவான் கூறினார். போதைப்பொருள்கள் அண்டை மாநிலத்திலிருந்து சாலை வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது என்றார். மருந்துகளை 1.3 மில்லியன் நபர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று அவர் கூறினார். ஜூலை 16 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சந்தேகநபர் மீது குற்றம் சாட்டப்பட்டதாகவும், அதனை மறுத்து அவர் விசாரணை கோரியதாகவும் ரிபுவான் கூறினார்.
விருந்தினர் உறவு அதிகாரியாகப் பணியாற்றிய சந்தேக நபர் மீது மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை, பிரம்படி போன்ற ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B (1)(a) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இந்த வழக்கில் இன்னும் சில நபர்கள் தொடர்புள்ளதா என்பதை கண்டறிய விசாரணை நடத்தி வருகிறோம் என்றார் அவர்.
மேலும் மக்கள் இந்த பழக்கத்தை எடுப்பதைத் தடுக்க இதுபோன்ற போதைப்பொருள் விநியோகம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு எதிராக சுங்கத்துறைக்கு உதவுமாறு பொதுமக்களை ரிபுவான் வலியுறுத்தினார். சிகரெட், புகையிலை மற்றும் வாகனங்கள் சம்பந்தப்பட்ட பிற கடத்தல் நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும். இதனால் நாட்டுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்றார் அவர்.









