கோலாலம்பூர்:
புடுவில் உள்ள ஒரு மனமகிழ் மையத்தில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த கும்பல் சண்டை தொடர்பில் மேலும் எட்டு பேரை போலீஸ் கைது செய்துள்ளது.
இவர்களோடு இதுவரை மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் ஈசா தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் 20 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் என்றும் மேல் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சொன்னார்.
வியாபாரம், கடன் தொடர்பில் இந்த சண்டை நிகழ்ந்தது என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக போர்ட்டிக்சன் மாவட்ட முன்னாள் போலீஸ் தலைவர் ஏசிபி அய்டி ஷாம் முகமட் புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் புதிய தலைவராக பதவியேற்ற நிகழ்ச்சியில் டத்தோ ருஸ்டி கலந்துகொண்டு நியமன பத்திரத்தை ஒப்படைத்தார்.
இதுநாள் வரை அப்பொறுப்பில் இருந்த எஸ்ஏசி A அஸ்மாடி அப்துல் அஸிஸ் புக்கிட் அமானுக்கு மாற்றப்பட்டார்.









