ஏர் இந்தியா சேவை ரொம்ப மோசம்; பாட்டாகவே பாடி விட்டார் ரிக்கி கேஜ்!

புதுடில்லி:

ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த போது தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை பாடகர் ரிக்கி கேஜ் இணையத்தில் பதிவிட்டுள்ளார். கிராமி விருது பெற்ற ரிக்கி கேஜ் இணையத்தில் வெளியிட்ட பதிவு, பரபரப்பான விவாதங்களை கிளப்பி உள்ளது.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நான் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்கிறேன். தவறு நேரும்போது சுட்டிக்காட்டுகிறேன். நான் தொடர்ந்து குறை சொல்வதை சிலர் கேலி செய்வர்; ஆனால், நான் ஏர் இந்தியாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்குகிறேன்.

செப்டம்பர் 14ம் தேதி டில்லியில் இருந்து பெங்களூரு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தேன். நான் 2 நாட்களாக தூங்காமல், ஐடிசி மவுரியாவில் கச்சேரி செய்துவிட்டு நேரடியாக பயணம் செய்து கொண்டிருந்தேன். முன்னதாக, எனது பை 6 கிலோ எடை அதிகமாக இருந்தது, நான் எப்போதும் போல் உடனடியாக பணம் செலுத்த முன்வந்தேன். நான் கவுன்டருக்குச் செல்ல வேண்டும் என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அது வெகு தொலைவில் இருந்தது.

முனையத்தின் மறுமுனையில் உள்ள அவர்களின் டிக்கெட் கவுன்டருக்கு அழைத்து சென்றார்கள். அங்கிருந்த ஊழியர், கூடுதல் எடைக்கான கட்டணம் வாங்கிக்கொள்ள மறுத்தார். ஏர் இந்தியா யு.பி.ஐ., மூலம் பணம் வாங்குவதில்லை; அதெல்லாம் வேஸ்ட் என்றார். 50 நிமிட போராட்டத்துக்கு பிறகே பணம் வாங்கிக்கொண்டனர்.

செப்டம்பர் 20ம் தேதி மும்பையிலிருந்து சான்பிரான்சிஸ்கோவிற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​ பயணிகளில் ஒருவரால் நீல விளக்கு அணைக்கப்பட்டது. விமானப் பணிப்பெண் ஒருவர் இண்டிகேட்டரைப் பார்த்தார், மிகவும் அலட்சியமாக ஏதுவும் கூறாமல் நீல விளக்கை அணைத்தார். நான் திகைத்துப் போனேன் ஆனால் எதுவும் பேசவில்லை.

இது வாடிக்கையாளர்கள் மீது அவர்கள் முழுமையான அக்கறையின்மையைக் காட்டுகிறது.. எனினும் நான் ஏர் இந்தியா விமானத்தில் தொடர்ந்து பயணம் செய்வேன். மேலும் இதுபோன்ற கதைகளை நீங்கள் அதிகம் பார்ப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் உண்மையில், இதயத்திலிருந்து, அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறேன். நம் அனைவருக்கும் உண்மையில் அவர்கள் தேவை. இவ்வாறு ரிக்கி கேஜ் கூறியுள்ளார். இது இணையத்தில் பேசும் பொருள் ஆகியுள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனம் நடவடிக்கை எடுக்குமாறு இணையத்தில் நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

மன்னிப்பு கேட்டது ஏர் இந்தியா
இதற்கு பதில் அளித்து சமூகவலைதளத்தில், ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ‘அன்புள்ள ஐயா, உங்கள் பயணத்தின் போது ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மனதார வருந்துகிறோம். இந்த பிரச்னை குறித்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இதை எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி’ என கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here