புத்ராஜெயா: வீட்டுக் காவல் வழக்கு தொடர்பான நீதிமன்ற மறுஆய்வுக்கான கூடுதல் ஒப்பந்தம் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் மேல்முறையீட்டு மனுவை டிசம்பர் 5ஆம் தேதி விசாரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 16ஆவது மாமன்னர் தனது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் வகையில் இந்த கூடுதல் ஆவணத்தை வழங்கியதாக நஜிப் கூறினார். மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் அஹ்மத் ஹனிர் ஹம்பலி @ அர்வி விசாரணை தேதியை உறுதி செய்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.
அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மற்றும் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில், உட்பட அவரது கோரிக்கையை ஆதரிக்கும் நான்கு பிரமாணப் பத்திரங்கள் இருப்பதை செவிவழிச் செய்திகளாக அறியப்பட்டதாக கூறியதை தொடர்ந்து 71 வயதான முன்னாள் பிரதமரின் விண்ணப்பம் ஜூலை 3, 2024 அன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, ஜூலை 9ஆம் தேதி மேல்முறையீட்டு நோட்டீஸ் ஒன்றை நஜிப் தாக்கல் செய்தார்.
உள்துறை அமைச்சர், சிறைத்துறைத் தலைவர், சட்டத்துறைத் தலைவர், கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயா, பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்), -பிரதமர் துறை மற்றும் மலேசிய அரசாங்கத்தில் சட்ட விவகாரப் பிரிவு தலைமை இயக்குனர் ஆகிய ஏழு பிரதிவாதிகளை அவர் தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஏப்ரலில் தாக்கல் செய்த விண்ணப்பத்தில், ஜன. 29, 2024 தேதியிட்ட ஆணையின் இருப்பை உறுதிப்படுத்தவும், பதிலளிக்கவும் பிரதிவாதிகளை கட்டாயப்படுத்துவதற்கு நஜிப் உத்தரவு பிறப்பிக்கக் கோருகிறார். கூடுதல் ஆணை இருந்தால், பிரதிவாதிகள் அதைச் செயல்படுத்தி, அவரை உடனடியாக காஜாங் சிறையிலிருந்து கோலாலம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு மாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொள்கிறார்.
SRC இன்டர்நேஷனல் சென். பெர்ஹாட் நிறுவனத்திற்குச் சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட்டை மோசடி செய்ததற்காக நஜிப் ஆகஸ்ட் 23, 2022 முதல் காஜாங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தண்டனையைத் தொடர்ந்து, அவர் செப்டம்பர் 2, 2022 அன்று அரச மன்னிப்பு மனுவை தாக்கல் செய்தார். இதன் விளைவாக அவரது தண்டனை 12 ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாகவும், அபராதம் 210 மில்லியனன் ரிங்கிட்டில் இருந்து 50 மில்லியனாகவும் குறைக்கப்பட்டது.









