கோலாலம்பூர்:
மருத்துவ நோக்கங்களுக்காக மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்ட 41 பாலஸ்தீனர்களுக்கும் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவர்கள் அனைவருக்கும் மலேசிய ஆயுதப் படையைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் துவாங்கு மிசான் ராணுவ மருத்துவமனையில் (HAT) வைத்து, எலும்பியல், குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவம் உட்பட தேவையான சிகிச்சை அளித்தனர் என்று, நாடாளுமன்ற இணையதளத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி வரை, அனைத்து நோயாளிகளும் தகுந்த சிகிச்சையைப் பெற்றுள்ளனர், அவர்களில் 37 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், மேலும் நான்கு பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்” என்று அப்பதிலில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 16 முதல், பாதுகாப்பு அமைச்சகம், MAF மூலம், 41 பாலஸ்தீனிய நோயாளிகளையும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 86 பேரையும் ராயல் மலேசியா விமானப்படை (RMAF) விமானத்தைப் பயன்படுத்தி மலேசியாவிற்கு அழைத்து வந்தது.
அரசியல் பிழைப்புக்காக பாலஸ்தீனியர்களை சிகிச்சைக்காக மலேசியாவிற்கு கொண்டு வந்ததாக பல தரப்புகள் கூறிய கருத்தை அமைச்சகம் மறுத்துள்ளது. ஏனென்றால், பல தசாப்தங்களாக ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களின் நிலைமை குறித்து அரசாங்கம் எப்போதும் அக்கறை கொண்டுள்ளது” என்று அது மேலும் தெரிவித்துள்ளது.









