ராமேஸ்வரி ராஜா, தி. மோகன்
நிகழ்காலத்தில் மலேசியாவில் இணைய, சமூக ஊடகப் பயன்படுத்துதல் கட்டுப்படுத்தப்பட வேண்டுமா என்பது முக்கியமான விவாதமாக உள்ளது.

இணையதளத்தில் போலியானதகவல்கள், வெறுப்புரை, தனிநபர் மீது மேற்கொள்ளப்படும் சைபர் அடிப்படையிலான இணைய பகடிவதைக் கொடுமைகள் போன்றவை சமூக நலனுக்கும் ஜனநாயக அடிப்படைகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளன இவ்வாறான சவால்களைக் கருத்தில் கொண்டு. ஒருதிறந்தவெளி, பாதுகாப்பான இணையத்தை உருவாக்கச் சமநிலை உள்ள கட்டுப்பாடுகள் அவசியமாகின்றன என அரசாங்க அமைப்புகளின் மறுசீரமைப்பு, சட்டத்துறை துணையமைச்சரும் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். குலசேகரன் குறிப்பிட்டார்.
மக்கள் ஓசை. மலேசிய தகவல் தொடர்பு. பல்லூடக ஆணையத்துடன் (MCMC) இணைந்து இணைய பகடிவதைத் தொடர்பான விழிப்புணர்வு மேலும், கட்டுப்படுத்துதல் தொடர்பான நேர்காணல்களை மேற்கொண்டு வருகிறது.
இதன் அடிப்படையில், துணையமைச்சர் குலசேகரன் மக்கள் ஓசை ஸ்டூடியோவிற்கு வருகைப் புரிந்து தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். தகவல்தொடர்புத் துறை நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மை கடமைகளை பின்பற்ற வேண்டும். தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க வேண்டும். மேலும் வெறுப்புரை. போலியான தகவல்களை பரப்புபவர்களுக்கு தண்டனைகள் அளிக்கவேண்டும்.
இத்தகைய சமநிலையுடன் செயல்படும் அணுகுமுறையால் மலேசியர்கள் ஒரு நவீன டிஜிட்டல் சமூகத்தின் பயன்களை அனுபவிக்க முடியும். மேலும், தனிநபர் பாதுகாப்பு மட்டுமன்றி சமூக ஒற்றுமையும் உறுதிசெய்யப்படும். இணைய குற்றங்கள் அதிகரிப்பது மிகுந்த கவலைக்குரியது.
சைபர் அடிப்படையிலான கொடுமைகள் எவ்வாறு பலரின் வாழ்க்கையைத் துன்புறுத்துகின்றன என்பதற்கு சமீபத்திய சம்பவங்கள் சாட்சி. அரசாங்கம் இந்தப் பிரச்சினையை ஆழமாகக் கையாள புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என அவர் கருத்துரைத்தார்.
இணைய பகடிவதை காரணமாக சமீபத்தில் நிகழ்ந்த சோகமான சம்பவத்தைப் பொறுத்தவரை தற்போதைய சட்டம் போதுமானதா என வினவியபோது. இப்போது உள்ள சட்டம் சைபர் அடிப்படையிலான கொடுமை தொடர்பான விவகாரங்களில் போதுமானதாக இல்லை என்பதற்கு இது உறுதியான சாட்சி. அரசு இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உறுதியான பங்குதவலுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளது என அவர் பதிலளித்தார்.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கத்தின் இணையதள பாதுகாப்பு சட்டம் (Online Safety Act) அறிமுகமாக உள்ளதால், சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் தளங்களில் ஒழுங்கு முறைகளை அறிமுகப்படுத்தவேண்டும்.
குற்றவியல் சட்ட திருத்தங்கள்:
இனிமேல் சைபர் அடிப்படையிலான கொடுமைகளைத் தண்டிக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும். குறிப்பாக இதில் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் கூடுதல் தண்டனைகள் விதிக்கப்படும். சமூக ஊடக அனுமதி விதிகள்படி 2025ஆம் ஆண்டின் முதல் நாள் முதல் சமூக ஊடக நிறுவனங்களுக்கு உரிய அனுமதி அவசியமாக்கப்படும்.
இத்தகைய சட்டமாற்றங்கள் கட்டுப்பாடுகள் ஒருங்கிணைந்த வழியாக மலேசியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு எடுத்துள்ள உறுதியான நடவடிக்கைகளை பிரதிபலிக்கின்றன எனவும் அவர் கூறினார். பொதுமக்கள் அல்லது பயனர்கள் சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவைப் பகிர்வதற்கு முன் சிறிது யோசிக்க வேண்டும். உங்கள்பதிவுகள் மற்றவர்களுக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் அதை அவர்கள் எவ்வாறு பொருள் கொள்ளக்கூடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
தனியுரிமையை மதிப்பதுடன் மற்றவர்களின் தனிப்பட்ட விவரங்கள், புகைப்படங்கள் அல்லது தகவல்களை அவர்கள் அனுமதி இல்லாமல் பகிர்வதைத் தவிர்த்துவிடுங்கள். நேர்மையான அணுகுமுறையுடன் இணையத்தில் செயல்படுங்கள். எதிர்ப்புகள் அல்லது எதிர்மறையான கருத்துகளைப் பகிர்வதைத் தவிர்த்துவிடுங்கள். மோசடிகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்திக்கொள்ளுங்கள். தனிப்பட்ட தகவல்களை சமூக ஊடகங்களில் பகிரும்போது எச்சரிக்கையுடனும் கவனமாகவும் இருங்கள் என சமூக ஊடகங்களில் பதிவுகளைப் பகிரும் பொதுமக்களுக்கு குலசேகரன் வலியுறுத்தினார்.









